அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், ஞானசேகரன் மீதான 11 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். பின்னர், நேற்று ஞானசேகருக்கான தண்டனையை அறிவித்தார். அதன்படி, ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டணையும், ரூ.90,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்! எனக்கூறியுள்ளார். அந்த வீடியோவில் கடந்த ஆண்டு டிச.23-ந்தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
டிச.24-ந்தேதி ஞானசேகரனை கோட்டூர் போலீசார் கைது செய்கின்றனர். அதன்பின் விடுதலை செய்கின்றனர். மறுநாள் 25-ந்தேதி மாலை ஞானசேகரனை மீண்டும் கைது செய்கின்றனர். ஏன் ஞானசேகரனை விடுதலை செய்தார்கள்? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்?
அரசு வழக்கறிஞர் சொல்கிறார் சம்பவத்தன்று ஞானசேகரனின் மொபைல் இரவு 8.52 மணி வரை பிளைட் மோடில் இருந்தது என்று. உண்மைதான். CDR -ம் அதை தான் சொல்கிறது. ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என்ற விவரம் என்னிடம் உள்ளது. 8.52 மணிக்கு பிறகு 8.55 மணிக்கு ஒரு காவல்துறை அதிகாரிக்கு தான் முதல் போன் காலை ஞானசேகரன் செய்கிறார். 8.55 மணிக்கு காவல்துறை அதிகாரிக்கு செய்த முதல் போன்கால் எதற்காக? அந்த காவல்துறை அதிகாரி 6 நிமிடங்கள் கழித்து 9.01-க்கு திரும்ப ஞானசேகரனை மீண்டும் அழைக்கிறார்? எதற்காக?
அதன் பிறகு அந்த அதிகாரியிடம் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கால் செல்கிறது. அதிகாரிக்கும் ஞானசேகரனுக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்பினார். காவல்துறை மீது நான் பெரும் மதிப்பு வைத்துள்ளேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அந்த காவல்துறை அதிகாரியின் பெயரையும், பதவியையும், அவரது மொபைல் நம்பரையும் நான் வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்டார்.