சிவராத்திரி அன்று தனது பக்தரை சிவன் அழைத்துக் கொண்டார் என மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ”நானும் மயில்சாமியும் அடிக்கடி சந்திப்போம். அந்த சந்திப்பில் சினிமாவை பற்றி பேசவே மாட்டார். நான் சினிமா குறித்து கேட்டாலும் அவர் பேச மாட்டார். எம்.ஜி.ஆர் பற்றியும் சிவன் பற்றியும் தான் அவர் பேசுவார். நாங்கள் இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக படங்களில் நடிக்கவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தில் மக்கள் கூட்டத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக என்னிடம் பேசுவார். சிவ ராத்தரி அன்று அவர் காலமானது தற்செயல் இல்லை. சிவனுடைய கணக்கு அவரது பக்தனை அவர் அழைத்துக் கொண்டார். மயில்சாமி இறுதியாக சென்ற கோயிலில் பால் அபிஷேகம் செய்வேன். மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்” என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
இதையடுத்து, மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, “நடிகர் மயில்சாமி நல்ல உள்ளம் கொண்டவர். யார் உதவி கேட்டாலும் முன் நின்று செய்து கொடுப்பவர். மயில்சாமி இருக்கக்கூடிய இடம் என்றும் கலகலவென இருக்கும். மயில்சாமி அனைவரது உள்ளத்திலும் நிறைந்திருப்பவர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நாம் இல்லாத போது எத்தனை பேர் வருகிறார் என்பது தான் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு அர்த்தம்” என நடிகர் பிரபு தெரிவித்தார்.