முதலமைச்சரும் நானும் சந்தித்ததாகக் கூறுவதை நிரூபிக்கத் தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலக தயாரா? என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை முடிந்த பிறகு முதலமைச்சர் முக.ஸ்டாலினுடன் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரை மணி நேரம் பேசினார் என எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மானோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் பதிலளித்து வந்தனர். இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை. முதலமைச்சருடன் ஒரு மணி நேரம் பேசியதாக கூறிய பழனிசாமிக்கு என்னுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டு உள்ளனர். முதலமைச்சரை நான் சந்தித்ததை பழனிசாமி நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விலக தயார். நிரூபிக்கவில்லை என்றால் பழனிசாமி விலக தயாரா?” என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சவால் விடுத்துள்ளார்.