கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். 18 வயதுக்குட்பட்ட அந்த சிறுமி வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த ஒரு மர்ம நபர், தன்னை நடன பயிற்சியாளர் என சிறுமியிடம் கூறியுள்ளார். மேலும், சிறுமிக்கு நடனம் கற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார்.
அந்த சிறுமியும் அதனை நம்பி, நடனம் கற்றுக் கொள்ளும் ஆசையில், அந்த நபரின் காரில் ஏறியுள்ளார். அப்போது, காருக்குள் வைத்து அந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், சிறுமியை அவரது வீட்டின் அருகிலேயே இறக்கிவிட்டு விட்டு, அங்கிருந்து உடனே தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, அந்த சிறுமி அழுதுகொண்ட, தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காடுகோடி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாரதி கண்ணன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் நடன பயிற்சியாளராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பாரதி கண்ணனை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.