மனைவியின் செயல்கள் அல்லது அலட்சியங்களால் (acts or omissions) கணவர் வருமானம் ஈட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டால், அப்பெண்ணால் கணவரிடமிருந்து பராமரிப்பு தொகை (maintenance) கோர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், கணவரிடமிருந்து பராமரிப்பு தொகை கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த கணவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர். தனது கிளினிக்கில் நடந்த தகராறின் போது, மனைவியின் சகோதரர் மற்றும் தந்தையால் துப்பாக்கியால் அவர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
குடும்ப நீதிமன்ற தீர்ப்பு உறுதி
குஷிநகர் குடும்ப நீதிமன்றம் மனைவியின் பராமரிப்பு மனுவை நிராகரித்திருந்தது. அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்திய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி லக்ஷ்மி காந்த் ஷுக்லா, “இந்த மாதிரியான சூழ்நிலையில் பராமரிப்பு வழங்குவது கடுமையான அநியாயத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, கணவரின் வருமான திறன் மனைவியின் குடும்பத்தினர் செய்த குற்றச்செயலால் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும் போது, நீதிமன்றம் கண்மூடித்தனமாக நடக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
கிளினிக்கில் நடந்த தாக்குதல்
வேத் பிரகாஷ் சிங் என்பவர், தனது கிளினிக்கில் நடந்த ஒரு தகராறின் போது, மனைவியின் சகோதரர் மற்றும் மாமனாரால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அவர் வருமானம் ஈட்ட முடியாத நிலைக்கும், மனைவிக்கு பராமரிப்பு வழங்க முடியாத நிலையுக்கும் தள்ளப்பட்டுள்ளார்.
முதுகுத்தண்டில் சிக்கிய குண்டுத்துகள்
உயர் நீதிமன்றம், கணவரின் முதுகுத்தண்டில் இன்னும் ஒரு குண்டுத்துகள் சிக்கியுள்ளதை கவனத்தில் எடுத்துக்கொண்டது. அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தால், முடக்கம் (paralysis) ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், அதனால் அவர் சீராக உட்காரவும் முடியாத நிலை, வேலை செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இடைக்கால பராமரிப்பு மனு நிராகரிப்பு
2025 மே 7 அன்று, குடும்ப நீதிமன்றம் மனைவியின் இடைக்கால பராமரிப்பு மனுவை நிராகரித்தது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. கணவரின் உடல் இயலாமை மறுக்க முடியாத உண்மை என்றும், அது நேரடியாக மனைவியின் குடும்பத்தினரின் செயலால் ஏற்பட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிபதி ஷுக்லா மேலும் “இந்திய சமூகத்தில் பொதுவாக கணவர் வேலை செய்து குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு தனித்துவமான சூழ்நிலைகளை கொண்டது.
கணவர் மனைவியைப் பராமரிப்பது ஒரு புனித கடமை என்றாலும், மனைவிக்கு அதுபோன்ற வெளிப்படையான சட்டப் பொறுப்பு எந்த நீதிமன்றமும் விதித்ததில்லை. இந்த வழக்கின் உண்மைகளைக் கவனித்தால், மனைவியும் அவளது குடும்பத்தினரும் செய்த செயல்கள் காரணமாகவே கணவர் தனது வாழ்வாதாரத்தை (livelihood) ஈட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மனைவி தனது செயல்கள் அல்லது அலட்சியங்களால் கணவரின் வருமான திறனை அழித்தால் அல்லது அதற்கு காரணமாக இருந்தால், அத்தகைய சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு பராமரிப்பு தொகை கோர மனைவிக்கு அனுமதி அளிக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில் பராமரிப்பு வழங்குவது கணவருக்கு கடுமையான அநியாயத்தை ஏற்படுத்தும். பதிவுகளில் வெளிப்படும் உண்மையை நீதிமன்றம் புறக்கணிக்க முடியாது.” என்று தெரிவித்தார்..
எனவே மனைவியின் குடும்பத்தினர் செய்த தாக்குதல் காரணமாக கணவர் நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அந்த மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, பராமரிப்பு சட்டம் தொடர்பான வழக்குகளில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.
Read More : துப்பாக்கிச்சூடு வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான கமல் ஆர் கான் கைது..! மும்பை போலீசார் அதிரடி..!



