கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற சுமார் ஒரு லட்சம் பேர், உறுதிமொழி பத்திரம் வழங்கினால், அவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3,969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்து தற்போது வரை நகைக்கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.

இவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும், சென்னை அண்ணாநகர், திருமங்கலம், திருநகர் உள்ளிட்ட 10 நியாய விலைக்கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டால் பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.