மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடைசி கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. அதாவது, இந்த மகளிர் உரிமைத்திட்டத்தில் இணைய மாநிலம் முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களது வீடுகளுக்கு நேரடியாகவே சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்திருக்கிறார்கள்.
அதன்படி, மாதம்தோறும் உரிமைத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான (ATM) ஏடிஎம் கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறதாம். இந்த கார்டு மூலம்தான் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த 2 நாட்களாகவே, ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறதாம். ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு மெசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டும் வருகிறது.
தவறான வங்கிக் கணக்குகளுக்கு, உரிமைத்தொகை சென்று விடக்கூடாது என்ற நோக்கில் சோதனை அடிப்படையில், ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் செல்போன் வழியாகவும், விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. தகுதியான அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் என்றும் முதல்வர் முக.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.