சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மசாஜ் மற்றும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை நீலாங்கரை பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு மசாஜ் சென்டரில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நீலாங்கரை சரக உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது “ஸ்பா” என்ற பெயரில் மறைமுகமாக பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.
சோதனையின் போது அங்கிருந்த 9 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்புக்காக அரசுக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் சிலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. மேலும், இந்த சட்டவிரோத நடவடிக்கையை முன்னின்று நடத்தியதாகக் கூறப்படும் ஸ்பா மேலாளரை போலீசார் கைது செய்து அவரின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள ஸ்பா உரிமையாளர் ஆனந்த் மற்றும் சித்ரா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். போலீசார் ரைடு வருவது முன்கூட்டியே தெரிந்து இருவரும் தப்பியோடியதாகவும் தெரிகிறது. அவர்கள் இருவரும் சிக்கினால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்பா யார் பெயரில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது? இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட ஸ்பாவுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும், அதன் உரிமத்தை ரத்து செய்யும் பணியும் மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
சமீப காலமாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) மற்றும் ஓஎம்ஆர் (OMR) பகுதிகளில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சில இடங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக எழும் புகார்களும் அதிகரித்துள்ளன. இந்த சூழலில் இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



