இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பான கட்டணங்களை அண்மையில் ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும், தங்கள் வங்கிக் கணக்கு அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முறை பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் தான், தனது வாடிக்கையாளர்களுக்கு, இந்தியன் வங்கி சார்ப்ல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட, மற்ற வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் பட்சத்தில் புதிய கட்டணம் விதிக்கப்படும். அதாவது, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் ஜிஎஸ்டியும், நிதி அல்லாத சேவைகளுக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
புதிய கட்டணம் எவ்வளவு..?
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி, மற்ற ஏடிஎம்களில் பணம் எடுத்தால், ரூ.21 மற்றும் ஜிஎஸ்டி 3.78 ரூபாய் சேர்த்து மொத்தம் ரூ.24.78 தற்போது வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு இவ்வாறு செய்தால், ரூ.2 அதிகரித்து, ரூ.26.78 என்ற அளவுக்கு உயரலாம் என்று வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.