செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரனைபுதுச்சேரி 2-வது தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் மோகன்ராஜ் (24). இவர், ஏசி சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக பழகிய இவர்கள், நாளடைவில் காதலில் விழுந்துள்ளனர்.
இந்நிலையில், இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மோகன்ராஜிடம் இன்ஸ்டாகிராம் காதலி சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் மோகன்ராஜ் ஒரு வாரமாகவே கடும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மோகன்ராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயின் புடவையை எடுத்து ஃபேனில் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தகவல்களின் பேரில் சென்ற கூடுவாஞ்சேரி போலீசார், மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி சண்டையிட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.