தமிழக அரசியல் களத்தில் சட்டமன்ற தேர்தல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ள நிலையில், 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் வெளியேறிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் நிலவிய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் முதலமைச்சரின் பதிலுரைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்ட பேரவை, தற்போது இந்த நிதிநிலை அறிக்கைக்காக மீண்டும் கூடவுள்ளது.
நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, வரும் 20-ஆம் தேதி 2026-2027 ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகளும், நடப்பு நிதியாண்டிற்கான (2025-26) கூடுதல் செலவின மானியக் கோரிக்கைகளும் அவையில் முன்வைக்கப்பட உள்ளன. வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், முழுமையான பட்ஜெட்டுக்குப் பதிலாக, அடுத்த சில மாதங்களுக்கான நிர்வாக செலவினங்களை மேற்கொள்ளும் நோக்கில் இந்த ‘இடைக்கால பட்ஜெட்’ தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களை கவரும் அறிவிப்புகள் இடம்பெறுமா..?
அடுத்த சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், ஆளுங்கட்சியான திமுக இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் ஒருபுறம் இருந்தாலும், குடும்பத் தலைவிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையிலான புதிய திட்டங்கள் அல்லது ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கான நிதி உயர்வு குறித்த அறிவிப்புகள் இதில் இடம்பெறக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் என்பதால், மக்களின் ஆதரவை திரட்டும் விதமாக இந்த அறிக்கை அமைய வாய்ப்புள்ளது.
Read More : ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலைபார்ப்பது புத்திசாலித்தனமா..? வேறு நிறுவனம் மாறுவது புத்திசாலித்தனமா..?



