மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடன் எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் செய்யப்படாது என்றும், அந்த நாட்டிற்கு தற்போது உள்ள ஒரே விருப்பம் நிபந்தனையற்ற சரணடைதல் மட்டுமே என்றும் அவர் தெளிவாக தெரிவித்தார்.
மேலும், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சேர்ந்து அந்த நாட்டை வழிநடத்த “ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு புதிய தலைவரை” தேர்வு செய்வார்கள் என்றும் டிரம்ப் கூறினார்.
டிரம்பின் சமூக ஊடக பதிவு
இந்த விவகாரம் தொடர்பாக ட்ரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ “ஈரானுடன் எந்தவொரு ஒப்பந்தமும் இருக்காது. அவர்களுக்கு இருக்கும் ஒரே விருப்பம் நிபந்தனையற்ற சரணடைதல் தான். அதன் பிறகு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த தலைவரை தேர்வு செய்த பிறகு, நாங்களும் எங்கள் துணிச்சலான கூட்டாளிகளும் சேர்ந்து ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க முயற்சி செய்வோம். அப்போது ஈரான் பொருளாதார ரீதியாக மேலும் பெரியதும் வலுவானதும் ஆகும். ஈரானுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்கள்
கடந்த ஒரு வாரமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் பல முக்கிய இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து இராணுவ தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இது கடந்த சில ஆண்டுகளில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பதற்ற நிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஈரானின் அணு திட்டம் குறித்து அமெரிக்காவுன் ஈரான் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், திடீரென அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது..
அதன்படி, ஈரானின் முக்கிய ராணுவ தளங்கள் மற்றும் அரசியல் தலைமை தொடர்பான இடங்களை குறிவைத்து வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.. இந்த சம்பவம் மேற்கு ஆசியாவில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானின் பதிலடி
இதற்கு பதிலடியாக , ஈரான் பல கட்டங்களாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தன்னைக் காத்துக்கொள்ளவும் எதிரிகளை தண்டிக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஈரான் தெரிவித்துள்ளது.
பலி எண்ணிக்கை உயர்வு
இந்த மோதலின் காரணமாக பல பகுதிகளில் பெரும் சேதமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஈரான் சுகாதார அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களில் ஈரானில் மட்டும் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
Read More : இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி கொடுக்கணுமா..? தீயாக பரவிய தகவல்.. உண்மை என்ன..?



