ஈரான் – இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் நேபாளம், இலங்கை மக்களையும் ஈரானில் இருந்து வெளியேற்ற உதவுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இஸ்ரேல் உடனான மோதால் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் இருந்து நேபாள மற்றும் இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் உதவி செய்யும் என்று தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் தங்கள் குடிமக்களை வெளியேற்றுவதில் இந்தியாவிடம் உதவி கோரியதை அடுத்து, நேபாளம் மற்றும் இலங்கைக்கு உதவ இந்தியத் தூதரகம் ஒப்புக்கொண்டது. ஈரானில் சிக்கித் தவிக்கும் நேபாள மற்றும் இலங்கையர்களுக்கான அவசர உதவி எண்களையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.
ஈரானில் உள்ள இந்திய தூதரகம் X பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் வெளியேற்ற முயற்சிகள் நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்களையும் உள்ளடக்கும்” என்று தெரிவித்துள்ளது.
“நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் சேனலிலோ அல்லது அவசர தொடர்பு எண்கள் மூலமாகவோ தூதரகத்தை அவசரமாகத் தொடர்பு கொள்ளலாம். +989010144557; +989128109115; +989128109109” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலின் விளைவாக நிலைமை மோசமடைந்து வருவதால், ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு ஆபரேஷன் சிந்து என்ற நடவடிக்கையை தொடங்கியது.
வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது “ இதுவரை 517 இந்தியர்கள் ஆபரேஷன் சிந்துவின் கீழ் ஈரானில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். ஜூன் 21 அன்று துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் இருந்து ஈரானில் இருந்து இந்தியர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம் புதுதில்லியில் தரையிறங்கியது. ஆபரேஷன் சிந்து நடவடிக்கை தொடர்கிறது” என்று தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஈரான் மோதல்
ஜூன் 13 அன்று இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்று பெயரில் ஈரானிய இராணுவம் மற்றும் அணுசக்தி தளங்கள் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலிய போர் விமான எரிபொருள் உற்பத்தி மையம் மற்றும் எரிசக்தி விநியோக மையங்களை குறிவைத்து “ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3” என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது.. இரு நாடுகளும் மாறி மாறி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
Read More : இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துறது ரொம்ப கஷ்டம்.. போர் நிறுத்தமும் சந்தேகம் தான்.. ட்ரம்ப் பேச்சு..