கடந்த சில மாதங்களாக, தொடர்ச்சியான சரிவு காணப்பட்ட கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளில் பதற்றம் உச்சத்தை எட்டியதே இதற்குக் காரணம். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை எண்ணெய் விலையில் 12 சதவீதம் வரை மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பேரல் விலை தற்போது 77 டாலருக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. போர் பதற்றம் தொடர்ந்தால், விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.
அதாவது, Brent Crude எண்ணெய் விலை 5% வரை உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 75 டாலரைத் தாண்டியுள்ளதுடன் இது வாரங்களுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகக் கருதப்படுகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 5.35% உயர்ந்து 75.65 டாலராகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் 5.86% உயர்ந்து 72.03 டாலராகவும் உயர்ந்தது. ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) போன்ற முக்கிய எண்ணெய் கடத்தும் பாதைகளில் பதற்றம் உருவானால், அது உலகம் முழுவதும் எண்ணெய் விலையை பாதிக்கும்.
அணு குண்டுகள் தயாரிப்பதைத் தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை ஈரானை தாக்கியதாக இஸ்ரேல் கூறியது குறிப்பிடத்தக்கது. தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், மெஹ்ராபாத் விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மோதல், பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பு மீது ஈரான் பழிவாங்கும் தாக்குதலைத் தொடங்கும் அளவுக்கு தீவிரமடையாவிட்டால், எண்ணெய் விநியோகத்தில் பெரிய தாக்கம் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், ஒரு தீவிர சூழ்நிலையில், ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்பைத் தாக்குவதன் மூலமோ அல்லது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக போக்குவரத்தைக் குறைப்பதன் மூலமோ ஒரு நாளைக்கு 20 மில்லியன் பீப்பாய்கள் வரை விநியோகத்தை சீர்குலைக்கக்கூடும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்தியாவில், பெட்ரோலிய பொருட்களின் விலை உயரும் அபாயம் நிலவுகிறது. இருப்பினும், போதுமான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதால், தற்போதைக்கு எரிபொருள் விலை உயர்வு இருக்காது என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் மீதான தாக்குதல்களின் நோக்கம் அதன் அணுசக்தி உள்கட்டமைப்பு, பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் பல இராணுவ திறன்களை அழிப்பதாகும் என்று கூறினார். மறுபுறம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வியாழக்கிழமை, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒருதலைப்பட்சமானது என்றும், அமெரிக்கா எந்த வகையிலும் அதில் ஈடுபடவில்லை என்றும் கூறினார். மேலும், அமெரிக்க நலன்களையோ அல்லது அதன் வீரர்களையோ குறிவைக்க வேண்டாம் என்று அவர் தெஹ்ரானிடம் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.