ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, பூட்டுத்தாக்கு கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கே. வாசுதேவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஏற்கனவே இந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக புதிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு எந்த அவசியமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுகிறது என்றும், அதற்காக மறு முன் அனுமதிகள் பெறப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைப்பது வாகன போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, விபத்துகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது. சட்ட விதிமுறைகளை மீறி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, உடனடியாக அந்தப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலையோரம் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டால், அதன் சுற்றுப் பகுதியில் கடைகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிவித்தனர். இது வாகன போக்குவரத்தை பெரிதும் பாதிக்கும் என்பதுடன், நாளடைவில் அந்த பகுதி விபத்துகள் ஏற்படும் அபாயகரமான பகுதியாக மாறக்கூடும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், விபத்து ஏற்படும் சாத்தியத்தை கருத்தில் கொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவது ஏன் என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர். இவ்வழக்கு தொடர்பாக, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், பொதுப்பணித் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியோர் 2 வாரங்களுக்குள் விரிவான பதில்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Read more: டயப்பர்களால் குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுமா..? தினமும் எத்தனை முறை மாத்தணும்..?



