கோவை மாவட்டம் இருகூர் அருகே ஏஜி புதூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, ஏஜி புதூர் அருகே தீபம் நகர் பகுதியில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஹூண்டாய் i20 கார் ஒன்று வந்து, காரிலிருந்த நபர்கள் அப்பெண்ணை தாக்கி, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இதைக் கண்டு காரின் அருகே செல்ல முயன்றபோது, அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காருக்குள் இருந்த பெண் அலறிய குரல் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, வெள்ளை நிற காரில் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் கடத்தப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக உறவினர்கள் அழைத்துச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்ததாவது, “சூலூரிலிருந்து ஏஜி புதூர் நோக்கி சென்ற ஒரு காரில் அலறல் சத்தம் கேட்டதாக 100க்கு அழைத்து தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை காணாமல் போன பெண் குறித்து புகார் எதுவும் வரவில்லை. வாகனத்தின் பதிவு எண் தெளிவாக தெரியவில்லை; அதனை கண்டறிந்தவுடன் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார். இந்தச் சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



