ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ முதல்வர் விஜய்க்கு திமுக எம்.எல்.ஏக்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. புதிய ஆட்சி அமைந்து 40 நாட்கள் கடந்து நிலையில், ஆளுநர் உரையில் தவெக ஆட்சியில் செய்த சாதனை இடம் பெறவில்லை.. புதிய சாதனை திட்டங்கள் இருக்கிறதா..? என ஆவலுடன் காத்திருந்தோம்.. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆளுநர் உரையின் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும், தேசிய கீதம் இருமுறையும் பாடப்பட்டது. 2 முறை தேசிய கீதம் பாட வேண்டும் என இதற்கு முன்பும் ஆளுநர்கள் கோரிக்கை வைத்தார்கள்.. ஆனால், ஆளுநர் வைத்த கோரிக்கையை எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் ஏற்கவில்லை.. திமுக ஆட்சியில் இதே கோரிக்கை வைக்கப்பட்ட போது அதை நிராகரித்து பேரவையின் இறையாண்மையை காத்தோம்..
தேசிய கீதம் 2 முறையும் பாடப்பட்டதன் மூலம் அவையின் மரபு மீறப்பட்டுள்ளது. பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்பட்ட நிலையில் நமது டெரிட்டரியை ஏன் ஆளுநரிடம் கொடுத்துவிட்டீர்கள்.? எதற்காக காம்ப்ரமைஸ் செய்தீர்கள்..” என்று தெரிவித்தார்..
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் எந்த அடிப்படையில் நாட்டுப்பண் இருமுறை பாடியது தவறு என கூறுகிறீர்கள் என உதயநிதிக்கு கேள்வி எழுப்பினார்.. மேலும் “ தமிழ் தாய் வாழ்த்தை பாட முடியாத சூழலை கடந்த காலங்களில் நாம் பார்த்தோம்.” என்றும் கூறினார்.
அப்போது பேசிய உதயநிதி ‘ வழக்கமான மரபை மீறி இரு முறை தேசிய கீதம் பாடியது ஏன் என்று தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.. இருமுறை தேசிய கீதம் பாடிய நீங்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை இருமுறை பாடியிருக்க வேண்டியது தானே. ஆளுநர் மகிழ்ந்தார் என கூறும் நீங்கள், தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதை விட ஆளுநர் தான் உங்களுக்கு முக்கியமா..? உங்களுக்கு ஆளுநர் முக்கியமா? தமிழ் தாய் வாழ்த்து முக்கியமா? என விளக்கம் தாருங்கள்..
உதயநிதியின் இந்த பேச்சுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி கொடுத்தார்.. அப்போது பேசிய அவர் “ ஆளுநர் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதே எங்கள் முதல்வரின் வெற்றி தான்.. கடந்த 4 ஆண்டுகளில் ஆளுநர் முன்பு தமிழ் தாய் வாழ்த்து பாடப்படவில்லை. கடந்த ஆண்டுகளில் ஆளுநர் அவையை புறக்கணித்ததான் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.. காம்ப்ரமைஸ் என்ற வார்த்தை எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.. தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்தில் நாங்கள் காம்பரமைஸ் செய்யவில்லை..” என்று தெரிவித்தார்..



