ஐடி துறை நிறுவனங்கள் சரிவைச் சந்திக்கக் கூடும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என். கணபதி சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் உள்ள மற்ற தொழில்களைப் போல அல்லாமல், உலக பொருளாதார மாற்றங்களுக்கும், ஐடி துறைக்கும் நேரடி தொடர்பு உண்டு. உலகின் ஏதோ ஒரு மூளையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், அதன் எதிரொலியாக ஐடி துறையில் சிலருக்கு வேலை பறிபோகக் கூடும். அந்த வகையில், தற்போது ஐரோப்பாவில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு, அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் போன்ற காரணங்களால் ஐடி துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், எதிர்வரக்கூடிய எந்தவொரு நெருக்கடியும் தங்களை பாதிக்காது என்ற வகையில் 8 பில்லியன் டாலருக்கான வர்த்தகத்தை நோக்கி டிசிஎஸ் நிறுவனம் பயணித்து வருகிறது.

ஆனால், ஐடி ஊழியர்களிடையே தற்போது நியாயமற்ற கலாச்சாரம் ஒன்று பரவி வருகிறது. அதாவது, ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் அதே சமயத்தில், மற்றொரு நிறுவனத்திற்காகவும் நிழல் போல பணியாற்ற ஆரம்பித்துள்ளனர். இந்தப் போக்கு காரணமாக ஐடி துறையானது சரிவைச் சந்திக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கிறார் டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என். கணபதி சுப்பிரமணியன். எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பா மேற்கொண்டு வருகிறது. தங்களிடம் உள்ள மூல ஆதாரங்களைக் கொண்டு அதற்கு தீர்வு கண்டு வருகின்றனர். பிரான்ஸ் நாட்டில் சொந்த அணு ஆற்றலை கொண்டு நிலைமையை சமாளித்து வருகின்றனர். ஆனால், அமெரிக்காவின் பணவீக்கம் முக்கிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பொருளாதார காரணிகள் கவலைக்குரியதாக இருந்தாலும், மக்கள் தொடர்ந்து செலவுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, ஐடி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மீது சுமையை சுமத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளன. ஏற்கனவே செய்து வரும் ப்ராஜக்டுகளுக்கான முதலீட்டை எந்த வகையிலும் குறைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று கிளையண்ட்ஸ் கூறி வருகின்றனர்.
சுமார் 3 முதல் 6 மாத கால அளவு கொண்ட குறுகிய கால புராஜக்டுகளில் கொஞ்சம் லாபம் கிடைக்கக் கூடும் என்றும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முடியும் என்றும் ஐடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.