உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த ஃபிரோஸ் அகமது – சாலி பேகம் (33) தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக தம்பதி இருவரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றனர். குழந்தை பெற்று கொடுக்க முடியவில்லை என்று மருமகள் சாலிபேகத்தை அவரது மாமியார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மீண்டும் இருவருக்குள்ளும் குழந்தையில்லாதது குறித்து தகராறு முற்றியுள்ளது. அப்போது மருமகள் சாலி பேகத்தை மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதோடு மட்டுமின்றி, அவரது வாயில் மாமியார் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளார். இந்த விஷம் அவரது தொண்டை வழியாக உடலுக்குள் இறங்கியது. இதுகுறித்து உடனடியாக தனது சகோதரர் கவுஸ் முகம்மதுவிற்கு சாலிபேகம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற கவுஸ் முகம்மது, தனது சகோதரி சாலிபேகத்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு சிகிச்சை பலன்றி சாலிபேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சாலி பேகம் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், சாலி பேகத்தின் கணவர் ஃபிரோஸ் அகமது, அவரது தாய் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.