மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார் என்பது குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பகடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மறைந்த ஆர்.பி.எஃப். உதவி ஆய்வாளர் கோவிந்தராஜின் திருவுருவச் சிலை மற்றும் கல்வெட்டை அவரது குடும்பத்தார், அவர்களது குடியிருப்பு வளாகத்தில் அமைத்துள்ளனர். இதனை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி திறந்து வைத்தார். அதன்பின்னர் வழக்கறிஞர் தமிழ்மணி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு, இதுகுறித்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி கூறுகையில், “நான் அறிக்கை கொடுத்து 4 மாதங்களுக்கு மேலாகிறது. முன்னாள் முதல்வர் மற்றும் ஒரு கட்சியின் தலைவரின் மரணம் என்பதால், இது போன்ற கேள்விகள் எழுகிறது. எனது அறிக்கையில் எந்த சந்தேகமும் இல்லாமல் வழங்கியதால்தான் எந்தவித சர்ச்சையும் எழவில்லை. இந்த அறிக்கை குறித்து எந்தெந்த, என்னென்ன சந்தேகம் எழுந்ததோ, அதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்” எனக் கூறினார்.

குறிப்பாக, ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தும் வேலையை ஒரு டாக்டர் செய்யவில்லை, நர்ஸ் செய்யவில்லை. அவருடைய உடலை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தில் உபகரணங்களை சுத்தம் செய்யும் நபர்கள்தான் பதப்படுத்தினார்கள் என்று உங்கள் அறிக்கையில் இருக்கிறது என்று வழக்கறிஞர் தமிழ்மணி அழுத்தமாக கேள்வி எழுப்பினார். அதற்கு, “இது சென்சிட்டிவான விஷயம். இதுகுறித்து அந்த அறிக்கையில் நான் நிறைய எழுதியுள்ளேன். என்னுடைய அறிக்கையில் சாட்சியம் அளித்ததை வைத்துதான் சொன்னேன். அதாவது ஜெயலலிதாவை சிபிஆர் செய்தது மருத்துவரோ நர்ஸோ இல்லை, அறுவை சிகிச்சை அறையில் பணியாற்றும் நபர்கள்தான். எம்பார்மிங் செய்ய கடிதம் கொடுத்தது இன்னொருவர். அவர் யார் என நான் சொல்ல முடியாது. எய்ம்ஸ் மருத்துவ ஆணையத்தை தவிர வேறு யாருக்குமே தனியாக கருத்து சொல்ல முடியாது” என்றார்.

மேலும் வழக்கறிஞர் தமிழ்மணி, “நீங்கள் பெரிய செல்வந்தர். சம்பளத்திற்காக இந்த வழக்கை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது எனக்கு தெரியும். இந்த வழக்கை சவாலாக ஏற்றுக்கொண்டு செய்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், “ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கின் ஆணையராக விரும்பி தான் ஏற்றுக் கொண்டேன். எனக்கு விடுபட்ட அதிகாரங்களை அரசிடம் எழுதி அனுப்பி பெற்றுக் கொண்டேன். நான் இந்தளவுக்கு பிரபலமாவேன் என்று கருதவில்லை. மக்கள் இதுபற்றி அதிகம் பேசி வந்தநிலையில், இதில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளதான் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றேன்” என்றார்.