ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்றும் இதனை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி 2017ம் ஆண்டு முதல் போட்டியை நடத்தி வருகிறது. மேலும், இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அது தொடர்பான வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா என மக்களவையில் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்று கூறினார். மேலும், கிராமப்புற மற்றும் பழங்குடியிர்களை ஊக்குவிக்கும் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை மத்திய அரசு இத்திட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்த அமைச்சகத்தின் கீழோ அங்கீகரிக்கவில்லை என்றும் மாட்டுவண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் அரசிடம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.