மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 1996ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற அதிரடி சோதனையில் 11,344 புடவைகள், காலணிகள் 750, கைக்கடி காரங்கள் 91, அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் 146, ஏசி 44, 700 கிலோ வெள்ளி பொருட்கள், 468 வகையான தங்கம், வைரம், ரூபி, மரகதங்கள், முத்துக்கள், ரத்தின கற்கள் ஆகியவையும் பணம் உள்ளிட்ட 57 வகையான உடமைகள் கைப்பற்றப்பட்டு 26 ஆண்டுகளாக கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 2017ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. இதில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா காலமானார். இதனையடுத்து, கருவூலத்தில் இருக்கும் அந்த பொருட்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம், அரசு வழக்கறிஞரை நியமித்து, ஜெயலலிதாவின் உடைமைகளை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் என்பதால் அதிமுகவினர் அதிகளவு ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்காமல் கர்நாடக அரசே ஏலம் விடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.