சேலம் மாவட்டத்தில், ஆயுதப்படைகள், காவல் படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் பணியாற்றி மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்” வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணிகள் போன்ற துறைகளில் பணியாற்றி மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் வருபவர்களின் சவாலான பணியினை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்குஆயுதப் படைகள், காவல் படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் நீரில் மூழ்குதல், விபத்துகள். தீ சம்பவங்கள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுதல், மின்சாரம், நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் இருந்து மீட்பு நடவடிக்கை போன்ற மனிதாபிமானம் சார்ந்த சிறந்த செயல்களில் ஈடுபட்டுவரும் தகுதியான நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் ஜீவன் ரக்ஷா பதக் விருது பெற விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண்.126 இல் செயல்பட்டுவரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி வருகின்ற 24.06.2025-க்குள் தங்களது கருத்துருக்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.