அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகளவில் நடைபெற்று வரும் போர் போன்றவை காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 1 லட்சத்தை தொடும் நிலைக்குச் சென்றுள்ளதால் எளிய மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக் கனியாக உள்ளது. இதற்கிடையே நகைப் பறிப்பு சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சிலருக்கு இழந்த நகை திரும்ப கிடைக்கிறது. பலருக்கு இழந்த நகை மீண்டும் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.. ஒரு பெண்ணின் நகை பறிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டாலும், குற்றவாளி யார் என்பதே தெரியாத நிலையில் வழக்கு விசாரணை நிழுவையில் இருக்கிறது. ஆனால் “குற்றவாளி பிடிபடுகிறாரா இல்லையா என்பது வேறு விஷயம்; ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே சட்டத்தின் முதன்மை நோக்கம்” என்று தெளிவாகக் கூறி, மதுரை உயர் நீதிமன்ற கிளை ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2022ஆம் ஆண்டு நகை பறிப்பு சம்பவத்துக்குள்ளானார். அவர் வீட்டிற்கு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் 8 சவரன் நகையை பறித்து தப்பிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் கடந்தும் குற்றவாளியை கண்டறிய முடியாத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் நிவாரணம் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கும் சட்டப் பிரிவுகளை நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. அப்போது நீதிபதிகள் தரப்பில், பெண்ணின் நகை பறிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளியைக் கண்டுபிடிக்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. எனவே நகையை பறிகொடுத்த பெண்ணிற்கு இழப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
பெண்களை குறிவைத்து நடைபெறும் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், “பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பும் நிவாரணமும் முதன்மை” என்ற நோக்கில் வழங்கப்பட்ட இந்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.



