உயர்நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும் போது, சால்வை, நினைவு பரிசுகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. குற்றவியல் நீதிமன்றங்கள், குடும்ப நீதிமன்றங்கள் என்ற வகையில் மாவட்ட வாரியாகவும், தாலுகா வாரியாகவும் நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்ட நீதிபதியாக பணியில் சேரும் ஒருவர் பணி மூப்பின் காரணமாக ஐகோர்ட் நீதிபதியாகவும் பதவி உயர்வு பெறுவார்கள். இந்நிலையில், மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, உயர் நீதிமன்ற நீதிபதிகளை வரவேற்பதற்காக புறநகர் பகுதியில் சாலைகளில் காத்திருக்க கூடாது என்றும் பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட எந்த சலுகைகளுக்காகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளுக்கு செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த காரணத்தை கொண்டும் நீதிமன்ற நேரத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் நேரடியாக எந்த கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுத்துறை மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில், கருப்பு நிற கோட், கருப்பு நிற டை அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.