ஒருகாலத்தில் வயதானவர்கள், பல்வேறு உடல்நிலை பிரச்சனை இருந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டது.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.. குறிப்பாக இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.. அதிலும் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.. இதய நோய்கள் ஆண், பெண் என இரு பாலினருக்கும் சமமாக பரவுகின்றன.

எனவே உங்கள் இதயத்தை நீங்கள் கவனித்துக் கொள்ளாவிட்டால், நீங்கள் கடுமையான பிரச்சனைக்கு ஆளாக நேரிடும் என்பது தெளிவாகிறது. மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், நொறுக்குத் தீனிகள், புகைபிடித்தல், மாசுபாடு, உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை இதயத்தை மோசமாகப் பாதிக்கின்றன என்று இருதயநோய் நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவிர, அதிகப்படியான மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றாலும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. இதே போல் மன நல பிரச்சனைகளும் இதயத்தை பலவீனப்படுத்தும். சில எளிய முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். இதற்கு புகை, மது, நொறுக்குத் தீனி போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து மனநலத்தை மேம்படுத்த வேண்டும்.
உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தினமும் 4 கிலோமீட்டர் தூரம் 40 நிமிடங்கள் நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். உடல் செயல்பாடு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பயனளிக்கும். நடைபயிற்சி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். நடைபயிற்சி அனைத்து வயதினருக்கும் நன்மை பயக்கும். உங்களது திறமைக்கு ஏற்ப நடக்க முடியும் என்பதுதான் சிறப்பு. நடைப்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்து நோய்கள் வருவதைக் குறைக்கிறது.
ஒரு நாளைக்கு 2,000 அடிகள் நடப்பவர்களை காட்டிலும் 6,000 முதல் 9,000 அடிகள் நடப்பவர்களுக்கு இதய நோய் அபாயம் 40 முதல் 50 சதவீதம் வரை குறைவாக உள்ளது என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, நடைபயிற்சி என்பது, இதய நோய் அபாயத்தை சுமார் 6 ஆண்டுகள் குறைக்கிறது. நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி மனநலமும் மேம்படும் என்பதால் மருத்துவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்துகின்றனர்..