நித்தியானந்தா ’கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறிவரும் நிலையில், அந்நாட்டிற்கான ஐ.நா. தூதராக விஜயபிரியா நித்தியானந்தா என்பவரையும் நியமித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று பல வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் நித்தியானந்தா. தொடர்ந்து, தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்து, அதனை கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கைலாசா என்ற நாட்டை அறிவித்தாலும் இதுவரை கைலாசா எங்கு உள்ளது என்பதையும், அவர் வாழும் வாழ்வியல் முறை பற்றியும் எந்த புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை. நடுவில் நித்தியானந்தாவின் உடல்நிலை மோசமானது. தான் சமாதி நிலைக்கு சென்றுவிட்டதாக நித்தியானந்தாவே அறிவித்தார். பின்னர், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையிடம் தஞ்சம் கேட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் பல்வேறு சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். இதில், கைலாசா சார்பில், ஐ.நா. சபையின் தூதுராக நியமிக்கப்பட்டுள்ள விஜயபிரியா நித்தியானந்தா என்பவர் கலந்துகொண்டார். பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசிய அவர், கைலாசாவின் அரசியல் சாசனம் என்று கூறப்படும் பகவத் கீதையின் முன்னுரையையும் வழங்கியதாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.