கர்நாடகாவின் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகா சாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.. இவர்கள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது..
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது..
இந்த நிலையில் ரேணுகாசாமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தர்ஷன் உட்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு கடந்த 24-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தர்ஷனுக்கு உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது..
இவ்வளவு சாட்சிகள் இருந்தபோதிலும் உயர் நீதிமன்றம் எவ்வாறு ஜாமீன் வழங்கியது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.. மேலும் நீதிபதிகள் “ நாங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிவெடுப்போம்.. உயர் நீதிமன்றம் செய்த அதே தவறை நாங்கள் செய்ய மாட்டோம்.. இது ஒரு கொலை வழக்கு என்பதால் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம்..” என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்..
இந்த நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.. அதன்படி ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷனின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது..
உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசாங்கத்தின் வாதத்தை ஏற்று ஜாமீனை ரத்து செய்ததால், தர்ஷனும் மற்ற 7 பேரும் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..