கேரள பெண்ணை திருமணம் செய்யும் ஆசையில் ஆசிரியர் ஒருவர் ரூ.8.50 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் சண்டூரில் உள்ள தனியார் பள்ளியில் தேவேந்திரப்பா (40) என்ற ஆசிரியர் பணியாற்றி வந்தார். இவர் திருமணத்துக்காக பெண் வேண்டி, ‘மேட்ரிமோனியல்’ தளத்தில் பதிவு செய்திருந்தார். இவரின் பதிவைப் பார்த்த கேரளாவை சேர்ந்த ஹர்பிதா என்ற பெண், தேவேந்திரப்பாவை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதோடு, ‘நான் தற்போது MBBS படிக்கிறேன். படிப்பை முடிக்க உதவுங்கள். படித்து முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம்’ என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

திருமண பதிவு தளத்தில் இருந்த போட்டாவை பார்த்து அசந்து போன, ஆசிரியர் தேவேந்திரப்பா பல மாதங்களாக, ஹர்பிதா கேட்டபோதெல்லாம் பணம் அனுப்பி வந்துள்ளார். மொத்தம், 8.50 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். ஒருமுறை, அப்பெண் தன்னை சந்திக்க வரும்படி கூறியதை நம்பி ஹைதராபாத் வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளார். மேலும், காதல் மோகத்தில் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுத்ததால், அவரை பள்ளி நிர்வாகம் வேலையில் இருந்தும் நீக்கிவிட்டது. அதனைத் தொடர்ந்தும் அப்பெண் பணம் கேட்டு வந்ததால் சந்தேகம் அடைந்த தேவேந்திரப்பா, தற்போது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.