பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவருமான பேகம் கலீதா ஜியா செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக BNP அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக நவம்பர் 23 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜியா, கடந்த 36 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்தார். நிமோனியா உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக வங்கதேச நாளிதழான தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.
வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா, கல்லீரல் சிரோசிஸ், மூட்டுவலி, நீரிழிவு உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது சிறுநீரகம், நுரையீரல், இதயம் மற்றும் கண்களையும் பாதிக்கும் உடல்நலச் சிக்கல்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வங்கதேசம், இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்கள் அவரது சிகிச்சையை மேற்பார்வையிட்டனர். சமீபத்தில் அவரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், உடல்நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
யார் இவர்? 1945 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் ஜல்பைகுரியில் பிறந்த கலீதா ஜியா, 1960 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மான் என்பவரை திருமணம் செய்தார். 1981 ஆம் ஆண்டு ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அரசியலில் நுழைந்த கலீதா ஜியா, அவர் நிறுவிய BNP கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
1991 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, பங்களாதேஷின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார். அவர் 1991, 1996 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் மூன்று முறை பிரதமராக பணியாற்றினார். நாடாளுமன்ற ஜனநாயக முறையையும், தேர்தல்களுக்கான காபந்து அரசாங்க அமைப்பையும் அறிமுகப்படுத்தியதற்காக அவர் அறியப்படுகிறார்.
Read more: நீங்கள் ஆன்லைனில் கடன் வாங்குகிறீர்களா? அப்ப கவனமாக இருங்க! மோசடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளது!



