கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் பகுதியில் வசித்து வருபவர் தமிழரசி. இவரது கணவர் கோபாலகிருஷ்ணன். இந்த தம்பதிகளுக்கு 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக, தமிழரசியை விட்டு கடந்த 10 வருடங்களுக்கு முன்பே கோபாலகிருஷ்ணன் பிரிந்து சென்ற நிலையில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
எனினும், தன்னுடைய 2 பிள்ளைகளுடன் தமிழரசி, கணவரின் தம்பிகள் பாலகிருஷ்ணன் மற்றும் முருகானந்தம் ஆகியோருடன் அதே வீட்டில்தான் வாழ்ந்து வந்தார். இந்த சூழலில், கணவரின் தம்பிகள் இருவரும் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்ததாக சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் தாலுகா போலீசில் தமிழரசி புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் முருகானந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணன், முன் ஜாமீன் பெற்று ஒரு வாரத்திற்கு முன்புதான் வெளியே வந்தார். அதேசமயம், முருகானந்தமும் ஜாமீனில் வெளியே வந்தார். போலீசில் சிக்க வைத்த தமிழரசி மீது சகோதரர்கள் இருவரும் ஆத்திரத்தில் இருத்தனர்.
இந்நிலையில், நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த பாலகிருஷ்ணன் தமிழரசியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் அரிவாளை எடுத்து தமிழரசியின் கழுத்தை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த கொலை சம்பவம் நடக்கும்போது முருகானந்தம் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. தமிழரசியின் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு உடனடியாக சிதம்பரம் தாலுகா போலீஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து, தமிழரசியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. பிறகு இந்த கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, முருகானந்தத்தை கைது செய்தனர். மேலும், தமிழரசியை கொலை செய்து தப்பியோடிய பாலகிருஷ்ணனை கைது செய்ய தனி படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



