அரியலூரில் பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்த செய்தியால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்தது ஒன்பதாம் வகுப்பு மாணவன் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சிறுமியின் வயிறு பெரிதாகி வந்திருக்கிறது. வயிற்றில் ஏதோ கட்டி ஏற்பட்டதாக நினைத்து அவரது பெற்றோரும் உள்ளூரில் மந்திரிப்பது என கை வைத்தியம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து மாணவியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போதுதான் மாணவி தான் கர்ப்பமான பின்னணியை பெற்றோரிடம் விவரித்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கும், அந்த மாணவி படிக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் எனக் கூறி இருவரும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராமில் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சிறப்பு வகுப்புகள் இருக்கிறது எனக் கூறி இருவரும் அடிக்கடி வெளியே சென்றிருக்கின்றனர். அப்போது ஆசைவார்த்தை கூறி அந்த சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதில் கர்ப்பமான நிலையில் தற்போது வெளியே சொன்னால் பிரச்சனையாகிவிடும் குழந்தை பிறந்த பிறகு நமக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என அந்த மாணவன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து தான் கர்ப்பமான விஷயத்தை பெற்றோரிடம் மறைத்ததாகவும் தற்போது வயிற்று வலியால் மாட்டிக் கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்களை அந்த மாணவி கூறி இருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனை திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது மாணவி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.