திருப்பூர் அருகே உள்ள உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் 59 வயது கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்து பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அவர் படிக்கும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரிடம் இது பற்றி கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் அந்த தொழிலாளியின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதோடு, இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், இந்த வழக்கில் நேற்று நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து 5000 ரூபாய் அபராதம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார் அந்த சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு தரப்பில் 2.5லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பில் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.