பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையமாக கொண்ட புதிய சமூக வலைத்தளத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல சமூக வலைதளங்களுக்கான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி கொண்டே இருக்கின்றன. இதனால் பயனர்கள் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றன.
அதிலும், குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். ட்விட்டர் தளத்தில் பலவற்றையும் மாற்றி அதிர்ச்சி அளித்து வருகிறார். காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, எல்லா அப்டேட்டுகளும் விமர்சனங்கள் பெற்றாலும், அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்த சூழலில் ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையாக கொண்ட புதிய சமூக வலைத்தளத்தை மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனின் சோதனை முயற்சியில் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், இதனை ட்விட்டர் போன்று ஒரு செய்தி பகிரும் தளமாக கொண்டு வர புதிய சமூக வலைதளத்தை தொடங்க உள்ளதாக தெரிகிறது. இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்யும் அம்சம் இருந்தாலும் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செயலியாகவே இன்ஸ்டாகிராம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ட்விட்டர் போன்று செய்திகளைப் பகிரும் புதிய தளத்தை உருவாக்க ஏதுவாக இன்ஸ்டாகிராம் புதிய தளத்தை தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த புதிய செயலி வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் என்றும், லிங்குகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பிரபலமாக உள்ள ட்விட்டருக்கு இணையாக மற்றொரு புதிய செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும்பட்சத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.