காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த ஏலாகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாரா. இவரது கணவர் இறந்த நிலையில், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், 3-வது மகள் ஷீபா (24) குன்னவாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற மகள் ஷீபா காணவில்லை என அவரது தாயார் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே, வாலாஜாபாத் அடுத்த கோவல வீடு ஏரிக்கரை கால்வாயில் இளம்பெண் சடலம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தபோது காணாமல் போன ஏலக்காமங்களம் கிராமத்தை சேர்ந்த ஷீபா என்பது தெரியவந்தது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பண்ருட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சாமுவேல் (25) சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரும் ஷீபாவும் கடந்த 10 ஆண்டுகளாக பள்ளியில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து காதலித்து வந்த இருவரும் சமீபத்தில் சாமுவேல் பெற்றோர்கள் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய பார்த்து வந்த நிலையில், இந்த விவகாரம் ஷீபாவுக்கு தெரியவந்தது. இந்நிலையில், ஷீபா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் ஷீபாவை கொலை செய்துவிட்டு கோவலமேடு ஏரிக்கரை கால்வாயில் போட்டுவிட்டு சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சாமுவேலை ஒரகடம் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.