கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 (IX 415) விமானத்தின் என்ஜினில் எண்ணெய் அளவு திடீரென குறைந்ததை தொடர்ந்து, விமானம் பாதியிலேயே மீண்டும் கொச்சி விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது.
வானில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் 1-வது என்ஜினில் உள்ள இன்ஜின் ஆயில் அளவு வெகுவாகக் குறைந்து வருவதை விமானப் பணியாளர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து முறையான விமானப் பாதுகாப்பு மதிப்பீட்டு நடைமுறையான ‘FORDEC’ மதிப்பீட்டை மேற்கொண்ட குழுவினர், சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து விமானத்தைத் தொடர்ந்து இயக்குவதைத் தவிர்த்தனர்.
என்ஜினில் எண்ணெய் அளவு தொடர்ந்து குறைந்து வந்ததால், அபுதாபிக்குப் பயணத்தைத் தொடர்வதில்லை என்று முடிவு செய்த விமானக் குழுவினர், உடனடியாக கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கே விமானத்தைத் திருப்பினர்.
இதற்கிடையே, இன்ஜின் ஆயில் அழுத்தம் ஆபத்தான எல்லையை எட்டியது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1-வது என்ஜினை முற்றிலுமாக அணைத்துவிட்டு மீதமுள்ள என்ஜின் உதவியுடன் விமானப் பணியாளர்கள் கொச்சியை நோக்கிப் பறந்தனர். கடுமையான தொழில்நுட்ப சவால்கள் இருந்தபோதிலும், போயிங் 737 விமானம் கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
காக்பிட்டில் விமானிகள் உயர்மட்ட நெருக்கடியைச் சமாளித்துக் கொண்டிருக்கும்போது, விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு நிலைமையின் தீவிரம் குறித்து ஆரம்பத்தில் தெரியவரவில்லை. பயணிகள் தரப்பில் இது வழக்கமான ஒரு திருப்பமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், காக்பிட்டில் இன்ஜின் ஆயில் அழுத்தம் குறைந்து, ஒரு என்ஜினை முற்றிலும் அணைக்க வேண்டிய அளவுக்குப் பெரும் ஆபத்து நிலவியது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் விமானப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தணிக்கைகள் மீதான கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அமைப்பு சர்வதேச விமானப் பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாடுகளின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்கிறது. இந்தியாவின் கடைசி முக்கியத் தணிக்கை அக்டோபர் 2021 இல் நடத்தப்பட்ட நிலையில், மற்றொரு மதிப்பீடு இந்த ஆண்டு நவம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது.
விமான என்ஜின்களில் நகரும் பாகங்களைச் உயவூட்டுவதற்கும் (Lubricating), வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் இன்ஜின் ஆயில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எண்ணெயின் அளவோ அல்லது அழுத்தமோ திடீரெனக் குறைவது என்ஜின் பழுதடைந்ததைக் குறிக்கும். எனவேதான், அபுதாபி பயணத்தைக் கைவிட்டு உடனடியாக கொச்சிக்குத் திரும்பும் முடிவை விமானக் குழுவினர் துரிதமாக எடுத்தனர்.



