பிரம்மபுத்திரா, கங்கை, உள்ளிட்ட 27 நதிகளில் சொகுசு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார். 50 நாட்களில் 4,000 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ளும் உலகின் மிக நீண்ட தூர நதிவழிப் பயணமாக இந்த சேவை திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 47% நீர்வழி போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 40% அளவுக்கு நீர்வழிப் போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் கடல்வழி, நதிகள் வழியாக நடக்கும் வர்த்தகம் வெறும் 3.5% மட்டுமே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் சுமார் 111 நதிகளை தேசிய நீர் வழித்தடங்களாக மாற்றி சரக்கு, பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கான பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 27 நதிகளில் 50 நாட்களில் 4,000 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ளும் உலகின் மிக நீண்ட தூர நதிவழி சொகுசு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த சேவையை கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனம், கங்கை விலாஸ் என்ற பெயரில் இயக்க உள்ளது. இந்த சேவையால் உள்நாட்டு வர்த்தகம் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.