திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மது விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை மேற்கொண்டு சோதனை நடத்த தடை விதித்தது.
இதனிடையே டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் மே மாதம் திடீர் சோதனை நடத்தப்பட்டு, அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
அதே போல் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரத்தீஷ், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு இடமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் வீடு, அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது வீடு, அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் எவ்வாறு தொடர்புப்படுத்தப்படுகிறார்.. அதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
நேற்று முன் தினம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என்று நீதிபதிகள் கூறினர்.. அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணமும், வாதமும் ஒத்துப்போகவில்லை என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து சீல் வைப்பது தொடர்பான நோட்டீஸை திரும்ப பெற்று கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது.
மேலும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனைங்களை திரும்ப ஒப்படைக்க தயார் என்றும் கூறியது. ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரவீந்திரன் வீடுகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்படும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனை சட்ட விதிகளை மீறியது என்று கூறிய நீதிபதிகள் எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், சோதனை நடத்துவதற்கும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரங்களும் இல்லை. மேலும் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More : சென்னை விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு.. அவசரமாக தரையிறக்கம்..