பிரதமரின் பிறந்த நாளன்று தூத்துக்குடியில் நிபந்தனைகளுடன் மினிமாரத்தான் போட்டி நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி சக்தி குமார் அமர்வு விசாரித்தது. பிரதமரின் பிறந்தநாளன்று மினி மாரத்தான் போட்டி நடத்திக் கொள்ளலாம். சில நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தனர். மாரத்தானில் பங்கேற்பவர்கள் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னம் , தலைவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது. சாதி சமூகம் மற்றும் மதத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ முழக்கமிடக்கூடாது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அசம்பவாவிதம் ஏற்படாமல் இருப்பதை மனு தாரர் உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். பங்கேற்பவர்களின் உடைகளில் வகுப்பு வாதம் , அரசியல் தலைவர்களின் மனதை புண்படும் வாசகங்கள் அல்லது படங்கள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட சமூகம் அல்லது தலைவரை சித்தரித்து பிளக்ஸ் போர்டுகள் மாரத்தான் போட்டியின் போது வைக்கக்கூடாது. என்ற நிபந்தனைகளை விதித்து மினி மாரத்தான் போட்டிக்கு அனுமதி அளித்து அனுமதி வழங்கப்பட்டது.
குதிரை,மாடுகள் தான் ஓடக்கூடாது !
நேற்று நெல்லையைச் சேர்ந்த நபர் ஒருவர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி ரேக்ளா, குதிரை பந்தயம் , காளைகள் பந்தயம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை .. பிறந்த நாள் என்றால் இனிப்புகள் வழங்குவது நலத்திட்டங்கள் செய்வது போன்றவற்றை செய்யலாம் , ரேக்ளாதான் நடத்த வேண்டும் என்பதில்லை என கூறி அனுமதி மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..