பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரை நேரில் சந்தித்த மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மும்பை பாந்த்ரா பகுதியில் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். கடந்த ஞாயிற்றுக்கிழமை, குறிப்பிட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு முன்பு துப்பாக்கிச்சூடு நடந்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர், 3 சுற்றுகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர்.
சல்மான் கானுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டு முன் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்றார். அவர் சல்மான் கான் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். அப்போது சல்மான்கான் குடும்பத்தினருக்கு முழு பாதுகாப்பு தருவதாக ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும். இச்சம்பவம் குறித்து சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், “எங்கள் குடும்பத்தினர் இந்த சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து யார் சொல்வதும் நம்ப வேண்டாம்” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.