திருமணமான பெண் அரசு பணியாளர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதிகாண் பருவத்திலும் கணக்கில் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பான முக்கிய மாற்றத்தை அரசு இன்று அறிவித்துள்ளது. திருமணமான பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு, இப்போது தகுதிகாண் பருவத்திலும் (Probation Period) சேவைக்காலமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதங்களாக மட்டுமே இருந்தது. அதன்பிறகு இந்த மகப்பேறு விடுப்பு 2016ல் 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. பிறகு 2021ல் 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அதுபற்றிய அறிவிப்பு முறைப்படி நிறைவேற்றப்பட்டது.
இப்போது தமிழகத்தில் அரசு பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுமுறை ஓராண்டு காலமாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் கடந்த ஏப்ரல் 28ம் தேதி தமிழக சட்டசபையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது திருமணமான அரசு பெண் ஊழயிர்களுக்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கெடுப்பில் எடுத்து கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் தான் அதுதொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “திருமணமான பெண் அரசு பணியாளர்கள் மகப்பேறு விடுப்பை தகுதி காண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. சிறப்பு அல்லது தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவ பணிக்காலம் 28.05.2025 அன்று முடிவுறாதவர்களுக்கு இச்சலுகை பொருந்தும். இதன்மூலம் பதவி உயர்வு, பணி மூப்பை இழக்க நேரிடாது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டம் 2016ல் உரிய திருத்தங்கள் செய்து பின்னர் வெளியிடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
Read more: தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை…! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா…?