தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் என்று தமிழக அரசும், காவல்துறையும் தெரிவித்தாலும் அதில் எந்தவித பயனும் இல்லை.
அந்த வகையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்துள்ள மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி கடந்த 2021 ஆம் வருடம் உலக நாட்டு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்ற நபர் அந்த சிறுமியின் துப்பட்டாவை பயன்படுத்தி அவருடைய கைகளை கட்டிப்போட்டு விட்டு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டார்.
இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிந்த அரவக்குறிச்சி காவல்துறையினர் சிவசுப்பிரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த சூழ்நிலையில், வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதாவது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிவசுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி நசீமா பானு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.