விஜய் டிவியின் ’குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் முந்தைய சீசன்கள் மட்டுமின்றி இந்த சீசனிலும் மணிமேகலை கோமாளியாக எல்லோரையும் சிரிக்க வைத்து வந்தார். ஆனால், அந்த ஷோவை விட்டு விலகுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார். அவர் நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்திற்கு நன்றி எதுவும் தெரிவிக்காததால் அவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் வெளியேறினார் என கிசுகிசுக்கப்பட்டது. மேலும், அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் வெளியேறினாரோ என மற்றொரு வதந்தியும் சுற்றி வருகிறது. அது பற்றி மணிமேகலை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்நிலையில், மணிமேகலை அவரது கணவர் உடன் சேர்ந்து சொந்தமாக சில ஆண்டுகளுக்கு முன்பே நிலம் வாங்கி வைத்திருக்கிறார். அங்கு ஒரு புது விஷயத்தை செய்வதாக குறிப்பிட்டு மணிமேகலை போட்டோ வெளியிட்டிருக்கிறார். அதில் ஒரு டிராக்டர் அந்த நிலத்தை சமன் செய்து கொண்டிருக்கிறது. அதனால், அவர் அங்கு என்ன தொழில் செய்ய போகிறார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். விரைவில் இதுகுறித்த அப்டேட்டை மணிமேகலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.