தியேட்டர், வணிக வளாகம், கடைகள் உள்ளிட்ட கூட்டம் நிறைந்த இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது… தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்று முதல் அரசு மருத்துவமனைக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் செல்வவிநாயம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிவிப்பில் “ தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம். மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக வழங்கியிருக்கிறோம். ஏனென்றால் மூடப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கொரோனாவுக்கான அறிகுறி இருப்பவர்கள் வெளியே செல்லவேண்டாம். வெளியே கட்டாயம் செல்லவேண்டும் என்றால் அவசியம் மாஸ்க் அணிந்து செல்லவேண்டும். மேலும் அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, உடனடியாக பரிசோதனை செய்யவேண்டும். வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனவே அவர்களுக்கு தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களை வெளியே அழைத்துச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து அழைத்துச்செல்லவேண்டும்.
காற்றோட்டத்துடன் திறந்தவெளி அரங்கமாக இல்லாமல் மூடப்பட்ட அறைகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்று.. எனவே தியேட்டர், வணிக வளாகம், கடைகள் உள்ளிட்ட கூட்டம் நிறைந்த இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும்.. கொரோனா பரவல் அதிகரித்தால் மட்டுமே மக்கள் மாஸ்க் அணிய கட்டாயப்படுத்துவோம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..