50 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை உதவித்திட்டம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தொழிலாளர் நல இயக்குநரகம் மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின், குறிப்பாக பீடி, திரைப்படம் மற்றும் சுரங்கத் துறை தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது நேரடி தாக்கத்தை இத்திட்டங்கள் ஏற்படுத்துகின்றன. தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, சுகாதார சேவைகள், கல்விக்கான நிதி உதவி மற்றும் வீட்டுவசதி ஆதரவை வழங்குவதே இதன் முக்கிய இலக்காகும்.
இந்த நல்வாழ்வு திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று கல்வி உதவித் திட்டம் ஆகும். இது பீடி, சினிமா, நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்குகிறது. தேசிய உதவித்தொகை இணையதளம் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெறுகிறது. நேரடிப் பணப்பரிமாற்ற முறை வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் நிதி வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.
சுகாதாரத் திட்டத்தின் கீழ், தேசிய மருந்தகங்களின் கட்டமைப்பு மூலம் புறநோயாளிகள் சேவைகள், அத்துடன் இதய நோய், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய், காசநோய் மற்றும் சிறு அறுவை சிகிச்சைகள் போன்ற கடுமையான நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைகளுக்கான கட்டணத்தை செலுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த நிதி உதவி சிறு அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.30,000 முதல் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கு உயிர் காக்கும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தப்பட்ட ஒருங்கிணைந்த வீட்டுவசதித் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டு பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அனைவருக்கும் வீட்டுவசதி என்ற அரசின் உறுதிப்பாட்டின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு நிலுவையில் உள்ள தவணைகளை அமைச்சகம் 2024 மார்ச் 31 வரை தொடர்ந்து வழங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.