விரைவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க இருப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா இருந்தபோதே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டவுடன் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அதில் திருத்தம் இருந்தால், அவர்களே செய்து அனுப்புவார்கள். தொடர்ந்து 2-வது முறையும் அனுப்ப வேண்டும். அதை பார்த்த பிறகு தான் புத்தகமாக அச்சிடப்படும். ஆனால், திமுக அரசு ஒரு முறை அனுப்பினார்களா? அல்லது எத்தனை முறை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை.
ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்ற அணுகுமுறை உள்ளது. அதைப்போல தமிழக ஆளுநரை, தமிழக அரசு நடத்த வேண்டும். ஒருவருக்கொருவர் ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல், ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும். ஜெயலலிதா சொல்வதை மட்டுமே செய்வார். மக்களை ஒருபோதும் அதிமுக ஏமாற்றியது இல்லை. வரும் காலங்களில் நன்றாக யோசித்து திமுக அரசு செயல்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்துவோம். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு, எனக்கு என்ன பயம்? விரைவில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை சந்திக்க திட்டம் உள்ளது” என்று தெரிவித்தார்.