உலகமே வெப்ப அலைகளால் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், இது குறித்து ஆய்வாளர்களிடம் இருந்து புதிய எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கோடைக் காலத்தை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதமே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், மே மாதம் வெப்பம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சம் தொட்டது.
இதற்கு முக்கிய காரணமே பருவநிலை மாற்றம் தான். இதனால் நாம் இப்போது மிக மோசமான ஒரு நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் முந்தைய ஆண்டை விட வெப்பம் மிகுந்த ஒன்றாக மாறி வருகிறது. புவி வெப்ப மயமாதலே இதற்குக் காரணம். தொழிற்சாலைகள், வாகனங்கள், ஏசிக்கள், பிரிட்ஜ்கள் நமது பூமியை மேலும் மேலும் வெப்பமாக மாற்றுகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
முறை தவறிப் பெய்யும் மழை, கோடையில் அதீத வெப்பம், மழைக் காலத்தில் கொட்டி தீர்க்கும் வெள்ளம் ஆகியவை நாம் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளோம் என்பதைக் காட்டுகிறது. இதற்கிடையே, உலகின் டாப் 50 ஆய்வாளர்களைக் கொண்ட குழு ஒன்று முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் பூமி 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.
இது பார்க்க மிகக் குறைந்த அளவு வெப்பம் போல இருந்தாலும், பூமியில் இது மிக மோசமான மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த 2013 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் பூமியின் வெப்பம் 0.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கின்றனர். வரும் ஆண்டுகளில் இது மேலும் மேலும் மோசமாகவே செய்யும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐநா காலநிலை மாற்றத்திற்கான ஆலோசனை அமைப்பான ஐபிசிசி, உலக நாடுகள் பருவ நிலை மாற்றத்தைத் தடுக்க ஒதுக்கும் பட்ஜெட்டின் தரவுகளைப் பகிர்ந்துள்ளது. அதில் 2021ஆம் ஆண்டின்படி, சமீபத்திய பகுப்பாய்வு IPCC அறிக்கையின் பின்னணியில் வருகிறது, இது கிரகம் காலநிலைக்கு மாற்ற முடியாத சேதத்தின் விளிம்பில் உள்ளது என்று எச்சரித்தது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க 2035இல் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை 2019இல் இருந்த அளவில் இருந்து 60 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தாண்டு இறுதியில் துபாயில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெறும் நிலையில், அதில் இந்த இலக்கை அடைவதில் நாம் எந்தளவுக்கு உள்ளோம் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. இதற்கிடையே, கடந்த 10 ஆண்டுகளில் புவி வெப்ப மயமாதலுக்கு மனிதர்களின் செயலே காரணம் என்று ஐபிசிசி அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2011-2020 வரையிலான காலகட்டத்தில் பூமியின் வெப்பம் 1.1 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதற்கு மனிதர்கள் செயல்பாடுகளும் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றமும் காரணமாகும். 2030க்குள் பூமியின் CO2 வெளியேற்றத்தை நாம் 40% குறைக்க வேண்டும். மேலும், 2050க்குள் இதைப் பெரும்பகுதி குறைக்க வேண்டும். இல்லையென்றால் பூமி தற்போதுள்ள வெப்பத்தைக் காட்டிலும் 2 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பமடையும். ஏற்கனவே புவி வெப்ப மயமாதலால் கடல்கள் மற்றும் நிலப்பரப்பில் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் அனைத்து உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.