தமிழக மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவை பொருத்தவரையில் அமைச்சராக மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் கரூர் மாவட்டத்தில் அவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் திமுக அவரை எப்போதும் தனி கவனத்துடன் கவனித்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதாவது 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக தெரிவித்து மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், மீண்டும் வழக்கை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
இத்தகைய நிலையில் ராதாகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சரின் சகோதரர் அசோக்குமாரின் வீடு மற்றும் அவரது உதவியாளர் காளிபாளையம் பெரியசாமி, ராயனூரில் வசித்து வரும் அமைச்சரின் ஆதரவாளரும், கரூர் மாவட்ட துணை மேயர் மற்றும் கொங்கு மெஸ் மணி, ஒப்பந்ததாரர் எம் சி எஸ் சங்கரின் அலுவலகம் உட்பட 10 இடங்களில் நேற்று சென்னை வருமானவரித்துறை ஆணையர் தலைமையில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சுமார் 150 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தான் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட சுமார் 10 இடங்களில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண் அதிகாரியிடம் திமுகவைச் சார்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கோவையில் செந்தில் பாலாஜி ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் வீட்டிலும், பொள்ளாச்சி அருகே தம்மம்பட்டி கிராமத்தில் அமைச்சரின் நண்பரான அரவிந்த் அவர்களின் பண்ணை வீட்டிலும் பொள்ளாச்சி பணப்பட்டி பகுதியில் அமைச்சரின் உறவினர் சங்கர் ஆனந்த் என்பவரின் கல்குவாரியிலும் வருமான வரித்துறை இன்றும் 2வது நாளாக சோதனை செய்து வருகிறது.