ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய விமானப்படை விமானங்களை இழந்ததாக கடற்படை அதிகாரியின் கருத்துக்கு இந்திய தூதரகம் விளக்கம் அளித்தது..
இந்தோனேசிய பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கேப்டன் சிவகுமார் ஆபரேஷன் சிந்தூரின் ஆரம்ப கட்டத்தில் இந்திய இராணுவத்தின் பதிலடி குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு ஆலோசகர் என்ன சொன்னார்?
ஜகார்த்தாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் “பாகிஸ்தான்-இந்தியா வான்வழிப் போரின் பகுப்பாய்வு மற்றும் இந்தோனேசியாவின் வான்வழி வலிமையின் பார்வையில் இருந்து எதிர்பார்க்கும் உத்திகள்” என்ற கருத்தரங்கில் பேசிய இந்திய கடற்படை கேப்டன், பாகிஸ்தான் ராணுவ நிறுவனத்தைத் தாக்கக்கூடாது என்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பை மட்டுமே குறிவைக்க வேண்டும் என்றும் கட்டளையால் கட்டுப்படுத்தப்பட்டதால், ஆபரேஷன் சிந்தூரின் ஆரம்ப கட்டத்தில் இந்திய விமானப்படை ‘போர் விமானங்களை இழந்தது’ என்று கூறினார்.
மேலும், அரசியல் தலைமையால்” தீர்மானிக்கப்பட்ட கட்டளையின் காரணமாக சில தடைகள் இருப்பதால், ஆரம்ப கட்ட நடவடிக்கையில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் இராணுவ நிறுவல்களைத் தாக்க முடியாமல் இருந்தது. நாங்கள் சில விமானங்களை இழந்தோம், அது இராணுவ நிறுவனத்தையோ அல்லது அவர்களின் வான் பாதுகாப்பு அமைப்பையோ தாக்கக்கூடாது என்று அரசியல் தலைமை வழங்கிய தடையின் காரணமாக மட்டுமே நடந்தது” என்று அவர் கூறினார்.
“ஆனால் தோல்விக்குப் பிறகு, நாங்கள் எங்கள் தந்திரோபாயங்களை மாற்றி, இராணுவ நிறுவல்களுக்குச் சென்றோம். எனவே முதலில் எதிரி வான் பாதுகாப்பை அடக்கி அழித்தோம், அதனால் தான் எங்கள் அனைத்து தாக்குதல்களையும் தரையிலிருந்து வான் ஏவுகணைகள் மற்றும் பிரம்மோஸ் தரையிலிருந்து தரை ஏவுகணைகளைப் பயன்படுத்தி எளிதாகச் செய்ய முடிந்தது,” என்று அவர் கூறினார்.
அவரின் இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் இதுகுறித்து விளக்கம் அளித்ததுள்ளது. பாதுகாப்பு இணைப்பாளர் கேப்டன் சிவகுமார் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தவறாக சித்தரிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு கருத்தரங்கில் பாதுகாப்பு இணைப்பாளர் அளித்த விளக்கக்காட்சி தொடர்பான ஊடக அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். அவரது கருத்துக்கள் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன, மேலும் ஊடக அறிக்கைகள் அவரின் கருத்துகளை தவறாக சித்தரித்துள்ளன.
இந்திய ஆயுதப்படைகள் நமது அண்டை நாடுகளில் உள்ள வேறு சில நாடுகளைப் போலல்லாமல் சிவில் அரசியல் தலைமையின் கீழ் சேவை செய்கின்றன என்பதை விளக்கக்காட்சி வெளிப்படுத்தியது. ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைப்பதாகவும், இந்தியாவின் பதில் தீவிரப்படுத்தப்படாதது என்றும் விளக்கப்பட்டது,” என்று தெரிவித்துள்ளது.