வங்காளதேசம் நாட்டின் ரங்க்பூர் மற்றும் குஷ்டியா பகுதிகளில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதுடன், இந்துக்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ரங்க்பூர் பகுதியில், டாக்கா நகரிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில், ரகிப் ஹசன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த கும்பல் அதிகாலை நேரத்தில் இந்து சமூகத்தினரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை தாக்கி சேதப்படுத்தியது. ஆனால், இந்தக் கொலையுடன் இந்து சமூகத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஹசனின் குடும்பத்தினரும் காவல்துறையும் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் “மூன்றாம் தரப்பினர்” இருக்கலாம் என்றும், விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில், குஷ்டியா பகுதியில், பள்ளி ஆசிரியரும் ஆன்மீகத் தலைவருமான ஷமீம் ரெஸா ஜஹாங்கீர், இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கும்பலால் கொலை செய்யப்பட்டார். மேலும், அவரது ஆதரவாளர்களில் குறைந்தது 7 பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர். அவரின் வழிபாட்டுத் தலமான ‘தர்பார்’க்கும் தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, கூடுதல் வன்முறை ஏற்படாமல் தடுக்க, காவல்துறையினரும் Rapid Action Battalion (RAB) படையினரும் சம்பவ இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டுமே 133 மத வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பங்களாதேஷ் இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், வங்காளதேசத்தில் மத அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்கிடமாக பார்க்கப்படுகிறது.
Read more: அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. ஹோர்முஸ் ஜலசந்தி மூடல்!உச்சக்கட்ட பதற்றம்..!



